கில்லியாக ஆடிய திணேஷ்
டெல்லி அணியில் நேற்று திணேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடினார். பஞ்சாபின் பந்து வீச்சை திறம்பட சமாளித்து ஆடிய அவர் 44 பந்துகளில் 69 ரன்களைக் குவித்தார். அதேபோல கேப்டன் கெவின் பீட்டர்சனும் நேற்றுதான் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளில் 49 ரன்களைக் குவித்து வெளியேறினார்.
மற்றவர்கள் சொதப்பல்
மற்ற வீரர்கள் சொதப்பி விட்டனர். முரளி விஜய்யோ அல்லது டுமினியோ சற்று நிலைத்து ஆடியிருந்தால் பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும் டெல்லி. அது தவறவே, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு அந்த அணி 164 ரன்களுடன் நின்று போனது.
அசத்திய மனான் வோரா
பின்னர் ஆடத் தொடங்கிய பஞ்சாபுக்கு ஷேவாக்கும், மனான் வோராவும் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். வோரா சிறப்பாக ஆடினார். அவருக்கு நன்றாக கம்பெனி கொடுத்து ஊக்குவித்து ஆட வைத்து ரசித்துப் பார்த்தார் ஷேவாக். மனானின் சில ஷாட்கள் அபாரமாக இருந்தன. 19 பந்துகளை மட்டுமே சந்தித்த வோரா 42 ரன்களைக் குவித்து வெளியேறினார். ஷேவாக் 23 ரன்களைச் சேர்த்தார்.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்கள்
அதன் பின்னர் வந்த விக்கெட்கள் அடுத்தடுத்து குறித்த இடைவெளியில் சரிந்தபடி இருந்தன.
மேக்ஸ்வெல் ஷாக் அவுட்
குறிப்பாக அதிரடி வீரர் கிளன் மேக்ஸ்வெல் எதிர்பாராத வகையில் இம்ரான் தாஹிர் பந்தில் போல்ட் ஆனபோது பஞ்சாப் ரசிகர்கள் ஷாக ஆகிப் போகினர். 11 பந்துகளில் 14 ரன்களில் வீழ்ந்தார் மேக்ஸ்வெல். தொடர்ந்து மில்லர், பெய்லி ஆகியோரும் சொற்ப ரன்களில் சாய்ந்தனர்.
கை கொடுத்த அக்ஸர் படேல்
ஆனால் அக்ஸர் படேல் நின்று ஆடினார். இவரது ஆட்டத்தால்தான் நேற்று டெல்லி தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. அக்ஸர் படேல் பொறுப்பை உணர்ந்து நிதானமாகவும், அதேசமயம், சிறப்பாகவும் ஆடினார். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 35 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரின் 4வது பந்தில் வெற்றியைத் தொட்டது பஞ்சாப்.
பேட்டிங்தான் சரியில்லை.. பீட்டர்சன்
தோல்விக்குப் பின்னர் பேசிய கெவின் பீட்டர்சன், எங்களது பேட்டிங் சரிவே தோல்விக்குக் காரணம் என்றார். கடைசி 5 ஓவர்களில் நாங்கள் ரன் குவித்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதால்தான் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல், நெருக்கடி தர முடியாமல் போய் விட்டதாக அவர் கூறினார்.
தப்பிப் பிழைத்தோம்.. பெய்லி ஒப்புதல்
டெல்லி அணியினர் தங்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்ததாகவும், ஆனால் அதைத் திறம்பட சமாளித்து மீண்டதாகவும் பஞ்சாப் கேப்டன் பெய்லி கூறினார்.
தொடர்ந்து முதலிடத்தில்
பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் 18 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்த அணி இதுவரை 9 போட்டிகளில் வென்றுள்ளது. டெல்லி அணி தொடர்ந்து கடைசி இடத்திலேயே நீடிக்கிறது.