மும்பை: ஐபிஎல் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட புதிய கமிட்டியை இந்திய கிரிக்கெட் வாரியம் அமைத்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்திலும் தெரிவிக்க அது முடிவு செய்துள்ளது.
இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன், முன்னாள் கல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.என்.படேல், முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்தப் புதிய குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அபிடவிட் ஒன்றையும் கிரிக்கெட் வாரியம் தாக்கல் செய்யவுள்ளது.
ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமையன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் இன்று அவசரமாக கூடி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.