சென்னை: இந்திய கிரிக்கெட் வாரியம் அது சம்பாதிக்கும் பணம் அத்தனையையும் அதுவே வைத்துக் கொள்வதில்லை. பண மூட்டைகள் மீது அது அடை காத்துக் கொண்டு உட்காரவில்லை. மாறாக, அனைத்து உறுப்பினர்களுடனும் அது வருவாயை பகிர்ந்து கொள்கிறது. விளையாட்டை வளர்க்க பல திட்டங்களை அது செயல்படுத்துகிறது என்று கூறியுள்ளார், வாரியத் தலைவர் பதவியிலிருந்து உச்சநீதிமன்றத்தால் சில மாதங்களுக்கு முன்பு விரட்டப்பட்டு தற்போது ஐசிசி சேர்மன் ஆகியுள்ள என்.சீனிவாசன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எப்போதுமே கிரிக்கெட் வாரியத்தை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள். பிசிசிஐ என்ன செய்கிறது என்பதை யாருமே முழுமையாக கவனிப்பதில்லை.
2004ம் ஆண்டு முதல் நல்ல வருவாயை ஈட்டி வருகிறது பிசிசிஐ. அதை அனைத்து மாநில உறுப்பு அமைப்புகளுடனும் பகிர்ந்து கொள்கிறது. 25 மாநில உறுப்பினர்களும் இந்த வருவாயைப் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.
மொத்த வருவாயில் 26 சதவீதம், உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் விளையாடும் வீரர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பிசிசிஐ பணத்தின் மீது அமர்ந்துள்ளதாக அடிக்கடி கூறுகிறார்கள். அது உண்மையில்லை. அப்படி இல்லை.
கடந்த காலத்தை விட இப்போது ரஞ்சிப் போட்டியில் ஆடும் வீரர்கள் நிறையவே சம்பாதிக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ரூ. 35,000 வரை அவர்கள் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய பிசிசிஐ உதவியுள்ளது என்றார் அவர்.