கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது பிக்ஸிங்கில் ஈடுபட்ட விவகாரத்தில் கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஐ.பி.எல். போட்டி நடைபெறும் காலத்தில் கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைவராக கவாஸ்கரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றம். அத்துடன் என். சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பணியாளர்கள் எவரும் கிரிக்கெட் வாரிய நிர்வாகப் பொறுப்புகளில் இருக்கக் கூடாது எனவும் தடை விதித்தது.
அதே நேரத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாளர்களாக இருக்கும் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பணியாளர்கள் கிரிக்கெட் வாரியப் பொறுப்புகளில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டனர்.
தமிழக கிரிக்கெட் சங்கத்தின் செயலராக இருக்கும் சீனிவாசனின் நெருங்கிய சகாவான காசி விஸ்வநாதன், தேசிய கிரிக்கெட் அகாடமி உள்ளிட்ட பல கிரிக்கெட் வாரிய குழுக்களில் உறுப்பினராக இருக்கிறார். அவர் இந்தியா சிமெண்ட்ஸ் குழுமத்தில் நீண்டகாலம் பணியாற்றிவர். இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளான சதீஷ், பிரசன்னா கண்ணன், ஆர்.ஐ. பழனி, பி.எஸ். ராமன் ஆகியோரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பணியாளர்கள். இவர்கள் அனைவருமே உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கிரிக்கெட் வாரிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் சதீஷ், வங்கதேசத்தில் நடைபெறும் 20 ஓவர் போட்டிகளுக்காக சென்றிருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவால் அவர் சனிக்கிழமையன்று நாடு திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.