துபாய்: பந்து வீசும் முறையில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த பவுலர்களை சோதித்து பார்க்க சென்னையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரிஸ்பேனிலுள்ள ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் மையம் மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை சோதித்து பார்க்கும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை பிரிஸ்பேனில் மட்டுமே இந்த சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சென்னையிலும் சோதனை நடத்திக்கொள்ள முடியும். இதனால் ஆசிய நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள், சோதனைக்கு உட்பட நேரிட்டால், அதிக தூரம் பயணிக்க வேண்டியிருக்காது.
சென்னை மையத்தில், குறைந்தது 12 அதிவிரைவு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை 3டி கோணங்களில் பந்து வீச்சாளரின் பந்து வீச்சை படமெடுத்து அளிக்கும். இதை வைத்து ஆய்வு நடத்தி, பந்து வீச்சாளர் பந்தை எறிகிறாரா இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதே வசதி பிரிஸ்பேனிலும் உள்ளது.
ஐசிசி எச்சரிக்கை அளிக்காவிட்டாலும் கூட பந்து வீச்சாளர்கள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள இந்த மையங்கள் உதவிகரமாக இருக்கும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
பந்து வீச்சாளர்கள் அதிலும், சுழற்பந்து வீச்சாளர்கள் அவ்வப்போது பந்தை எறியும் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். பாகிஸ்தானின் சையது அஜ்மல், இதே காரணத்துக்காக பிரிஸ்பேனில் சோதனைக்கு உள்ளாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இப்போது மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன் மீதும் ஐசிசியின் சந்தேகப்பார்வை திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.