சென்னை: சென்னை மாநகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு அம்மா மாளிகை என பெயர் சூட்டப்படும் என்று என்று மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.
மாநகராட்சி கூட்டத்தில் சைதை துரைசாமி இதுகுறித்து கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்கு ரூ.1000 கோடிக்கு மேல் அள்ளிதந்து அலுங்காத, குலுங்காத சாலைகளை முதல்வர் அமைத்து தந்துள்ளார்.
எனவே சென்னைபட்டினத்தின் வெள்ளை மாளிகையான, ரிப்பன் கட்டிட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய மாளிகைக்கு ''அம்மா மாளிகை'' என்று பெயர் சூட்டி சென்னை மாநகராட்சி அழகு பார்க்கிறது. இந்த ''அம்மா மாளிகை'' இனி சென்னையின் புதிய அடையாளமாக திகழும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்படும் அம்மா உணவகம், மலேரியா பணி, பாதுகாவலர் பணி, புள்ளி விவர பதிவாளர் மற்றும் துப்புரவு பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வந்தனர். இதில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு முழுமையான ஊதியம் சென்றடையவில்லை.
இந்த நிலையை போக்கும் வகையில் இனிவரும் காலங்களில் ''சுவர்ண ஜெயந்தி'' நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ள அண்டை வீட்டு குழுக்கள், மகளிர் குழுக்களை இந்த பணிகளில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக யாருடைய சிபாரிசையும் நாட வேண்டாம். நேரடியாக திட்ட அலுவலகத்தை அணுக வேண்டும். திட்ட அலுவலரிடம் பதிவு செய்தால் பணி மூப்பு அடிப்படையில் வேலை வழங்கப்படும். இவ்வாறு சைதை துரைசாமி தெரிவித்தார்.