பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு நடந்த சாம்பியன்ஸ் லீக்கின் 8வது ஆட்டத்தில் (பிரிவு ஏ) சென்னை சூப்பர் கிங்ஸ்-டால்பின்ஸ் (தென் ஆப்பிரிக்கா) அணிகள் மோதின.
'டாஸ்' ஜெயித்த டால்பின்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. வெய்ன் சுமித் 7 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், 2வது விக்கெட் இணையான பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதிரடி காட்டினார்கள். சுரேஷ் ரெய்னா தொடக்கம் முதலே விளாசி தள்ளினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் டால்பின்ஸ் வீரர்கள் தடுமாறினார்கள். 4 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 ஓவர்களில் 100 ரன்னை தாண்டியது. பிரன்டன் மெக்கல்லம் 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
சுரேஷ் ரெய்னா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரைலிங் பந்து வீச்சில் அவுட் ஆனார். சுரேஷ்ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த கேப்டன் டோணி முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். டுபிளிஸ்சிஸ் 30 ரன்னும், வெய்ன் பிராவோ 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 40 ரன்னுடனும் (15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) அஸ்வின் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டால்பின்ஸ் அணியும் ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. 2.3 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய அந்த அணி 8.5 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது.
அதன் பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணியின் அதிரடியில் தொய்வு ஏற்பட்டது. 20 ஓவர்களில் டால்பின்ஸ் அணி 188 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். டால்பின்ஸ் அணி தொடர்ந்து சந்தித்த 2வது தோல்வி இதுவாகும்.
மொத்தத்தில் பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பெய்த ரன் மழையால் ரசிகர்கள் மகிழ்ந்தனர்.