பெங்களூர்: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில் இன்று, சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டால்பின் அணிகள் மோதுகின்றன.
கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி விளிம்பில் இருந்து அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவிய டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது.
இந்தப் போட்டியில் தோற்றால் சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். மோர்னே வான் விக் தலைமையிலான டால்பின்ஸ் அணியும் தொடக்க ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்சுடன் தோற்று இருந்தது. அதிலும் கடைசி இரு பந்தில் 2 சிக்சரை விட்டுக் கொடுத்ததால் அந்த அணிக்கு வெற்றி நழுவிப் போனது.
டால்பின்ஸ் அணிக்கும் இது முக்கியமான போட்டி என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் மோதும் இப்போட்டி இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஹைதராபாத்தில் ஹோட்டல் ஒன்றில், பிரியாணி சாப்பிட அனுமதிக்காததை கண்டித்து சண்டை போட்ட டோணி, அதே ஆக்ரோஷத்தை டால்பினுக்கு எதிரான போட்டியிலும் காண்பிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.