ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஹைதராபாத்தில் நடந்த 7வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பாகிஸ்தானின், லாகூர் லயன்ஸ் அணியை மண்ணை கவ்வ செய்தது.
முதலில் பேட் செய்த லாகூர் அணி 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. அகமது ஷேசாத் 59 ரன்களும், உமர் அக்மல் 40 ரன்களும் விளாசினர்.
லாகூரின் ரன்வேகத்தை சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் வெகுவாக கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார் நரைன்.
பின்னர் ஆடிய கொல்கத்தாவுக்கு ராபின் உத்தப்பாவும், கேப்டன் கவுதம் கம்பீரும் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். ராபின் உத்தப்பா 46 ரன்களிலும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) கவுதம் கம்பீர் 60 ரன்களிலும் (8 பவுண்டரி) அவுட் ஆகினர்.
ஆனால் மிடில் வரிசை வீரர்கள் சொதப்பி ஒன்றன் பின் ஒருவராக அவுட் ஆனதால் ஆட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போராடி கொல்கத்தா அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.
கொல்கத்தா அணிக்கு இது 2வது வெற்றியாகும். ஏற்கனவே சென்னையை தோற்கடித்து இருந்தது. அத்துடன் ஐ.பி.எல்யும் சேர்த்தால் 20 ஓவர் கிரிக்கெட்டில் அந்த அணி தொடர்ச்சியாக பதிவு செய்த 11வது வெற்றி இதுவாகும்.