கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டித்தொடரில், வெற்றியுடன் தங்கள் கணக்கை துவங்கியுள்ளது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.
காமன்வெல்த் போட்டியில் நேற்றிரவு நடந்த மகளிருக்கான குரூப்-ஏ பிரிவு ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் கனடா மோதின. முதலில் இருந்தே இந்தியா ஆதிக்கம் செலுத்திவந்தது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்தியாவின் ராணி ராம்பால் முதல் கோல் போட்டார். 29வது நிமிடத்தில் பூனம் ராணியும், 37 மற்றும் 52வது நிமிடங்களில் ஜஸ்ப்ரீத் கவுரும் கோல்கள் அடித்தனர்.
கனடா தரப்பில், பிரின்னே ஸ்டெய்ர்ஸ் மற்றும் கர்லி ஆகிய இருவரும் கோல் போட்டனர். ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 4க்கு 2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி தனது முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தது. 27ம்தேதி தனது அடுத்த போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.