ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு
இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை படு கேவலமாக தோற்ற இந்திய அணியில் பல மாற்றங்களை கொண்டுவந்தது தேசிய கிரிக்கெட் வாரியம். இதன்படி பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோ டாவேஸ் மற்றும் களத்தடுப்பு (ஃபீல்டிங்) பயிற்சியாளர் திரேவோர் பென்னி ஆகியோருக்கு வரும் 25ம்தேதி தொடங்க உள்ள ஒரு நாள் போட்டித்தொடரில் ஓய்வளிக்கப்பட்டது.
பெயருக்கு ஒரு கோச்
ரவிசாஸ்திரி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். சஞ்சய் பாங்கர், பாரத் அருண் ஆகியோர் உதவி கோச்சுகளாக நியமிக்கப்பட்டனர். அணியின் பயிற்சியாளர் டன்கன் பிளட்சர் மட்டும் பெயருக்கு மட்டுமே கோச்சாக தொடரச் செய்யப்பட்டுள்ளார்.
வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா..
இந்நிலையில் இந்திய அணி ஒரு நாள் போட்டிகளுக்கு தயாராகிவருகிறது. இதற்கான வலைப்பயிற்சியில் நேற்று முதல் இந்திய அணி ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியை ஜோ டாவேஸ் மற்றும் திரேவோர் பென்னி ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
மார்க்வாக்கே கோட்டைவிடுவாரே...
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் குக் கொடுத்த கேட்சை, ஸ்லிப்பில் நின்ற ஜடேஜா கோட்டைவிட்டார். ஆனால் போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஜோ டாவேஸ், உலகிலேயே தலை சிறந்த ஸ்லிப் களத்தடுப்பாளர் மார்க்வாக்தான். அவரே சில நேரங்களில் கேட்சை கோட்டை விட்டுள்ளார் என்று அலட்சியமாக தெரிவித்தார்.
சீராக்கிட்டாங்க...
இறுதி டெஸ்ட்டின்போது, திரேவோர் பென்னி நிருபர்களிடம் பேசுகையில், இளம் இந்திய அணி அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்படுகிறது., ஸ்லிப் பீல்டிங் மட்டும் சரி செய்யப்பட வேண்டும். அதுவும் விரைவில் சீராகும் என்றார். ஆனால் அவர் கூறிய அடுத்த நாள் போட்டியின்போது இந்திய ஸ்லிப் வீரர்கள் இரு கேட்சுகளை கோட்டை விட்டனர்.