ராஞ்சி: 7வது ஐ.பி.எல். நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வினை 4வது வீரராக களம் இறக்கிய தமது நிலைப்பாடு சரியானதே என்று அதன் கேப்டன் டோணி கூறியுள்ளார்.
ராஞ்சியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் வென்றது.
இந்த ஆட்டத்தில் பின்வரிசை வீரரான அஸ்வினை முன்வரிசையில் 4வதாக களம் இறக்கிவிட்டார் டோணி. இது குறித்து டோணி கூறியதாவது:
ராஜஸ்தானுக்கு எதிரான வெற்றி என்பது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இந்த ஆடுகளத்தில் அடித்து விளையாடுவதற்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. இறுதி கட்டத்தில் ராஜஸ்தான் சில அபாரமான ஓவர்களை வீசிய போதிலும் அதை சமாளித்து ஒரு வழியாக வெற்றி பெற்று விட்டோம்.
இதில் ஜடேஜா விளாசிய சிக்சர் முக்கியமானதாக இருந்தது. அஸ்வினிடம் பேட்டிங் திறமை இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்ளவும், கூடுதல் பொறுப்புடன் விளையாடும் வகையிலும் முன்கூட்டியே இறக்கினோம். அதற்குரிய பலனை கொஞ்சம் தந்தார்.
இங்கு நாங்கள் சில சர்வதேச போட்டிகள் மற்றும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். இந்தியாவில் அழகான ஸ்டேடியங்களில் ராஞ்சியும் ஒன்று.
ஆட்டநாயகன் விருது பெற்ற ரவீந்திர ஜடேஜா கூறுகையில், இறுதி வரை பதற்றமின்றி நிதானமாக விளையாடுவதற்கு டோணி உறுதுணையாக இருந்தார். கடைசி ஓவர் வரை நின்றால் நம்மால் இலக்கை எட்ட முடியும் என்று அவர் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருடன் இணைந்து பேட் செய்வது இனிமையான விஷயம்.
ராஞ்சி எப்போதும் எனக்கு பிடித்தமான இடம். எப்போதெல்லாம் நான் இங்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் எனது அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளிக்கிறேன் என்றார்.