பிளட்சர்தான் பாஸ்
இதற்கிடையில் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டிக்கு முந்தைய நாள் பிரிஸ்டலில் நிருபர்களிடம் பேசிய இந்திய கேப்டன் டோணி, ‘பிளட்சரின் பயிற்சியின் கீழ் இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும். இன்னும் அவர் தான் எங்களுக்கு தலைவராக இருக்கிறார்.
ரவிசாஸ்திரி சும்மாதான்
ரவிசாஸ்திரி எல்லா விஷயங்களையும் மேற்பார்வையிடுவார். ஆனால் பிளட்சர் தான் தலைமை பயிற்சியாளர். அவரது அதிகாரம் குறைக்கப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை. அணிக்குள் அவர் முன்பு போல் தொடருகிறார். புதிய உதவி பயிற்சியாளர்களை வரவேற்கிறோம். அவர்கள் என்ன மாதிரியான மாற்றத்தை தருகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்' என்று கூறியிருந்தார். அவரது பேட்டியில் அதிகார தொனி இருந்ததாக பிசிசிஐ கருதுகிறது.
டோணிக்கு எச்சரிக்கை
எனவே இந்த விவகாரம் குறித்து அடுத்து நடைபெற இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் விவாதித்து முடிவு எடுக்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கேப்டன் டோணியை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
வேலையை மட்டும் டோணி பார்க்கட்டும்
"கேப்டன் டோனி தனது எல்லையை மீறி நடந்து இருக்கிறார். பயிற்சியாளரின் பதவி காலம் குறித்து முடிவு செய்வதில் அவருக்கு எந்த வேலையும் கிடையாது. நடந்த சம்பவங்கள் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் போல் டோணி நடக்கவில்லை. இந்த விவகாரம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
வீரர்கள் விஷயத்தில் பிசிசிஐ தலையிடுவதில்லை...
முதிர்ச்சி அடைந்த கிரிக்கெட் வீரரான அவர் தனது எல்லையை அறிந்து செயல்பட வேண்டும். போட்டியின்போது 11 பேர் கொண்ட அணியில் யார், யார் இருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எப்படி முடிவு செய்ய முடியாதோ, அதேபோல் அணியின் நிர்வாகிகள் எவ்வளவு காலம் நீடிப்பார்கள் என்பதை கேப்டன் டோணி முடிவு செய்ய முடியாது" என்று அந்த அதிகாரி காட்டமாக கூறியுள்ளார்.