செளதாம்ப்டன்: 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. 266 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை 1--1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் டிராவிலும், 2வது டெஸ்ட்டில் இந்தியா வெற்றியும் பெற்றது.
இந்த நிலையில் 3வது டெஸ்ட் போட்டி செளதாம்ப்டனில் நடந்து வந்தது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளைப் போல இல்லாமல், இப்போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக ஆடியது. குறிப்பாக அதன் பேட்டிங் மேம்பட்டிருந்தது. போட்டியின் ஆரம்பத்திலிருந்தே இங்கிலாந்தின் கை ஓங்கியே இருந்தது. இதனால் எழுந்திருக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது இந்தியா.
இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 569 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களைச் சேர்த்து டிக்ளேர் செய்தது.
இதன் மூலம் இந்தியா 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குக்குத் தள்ளப்பட்டது. இன்று ஆட்டத்தின் கடைசி நாள். இன்று இந்தியா தனது விக்கெட்களை வேகமாக பறி கொடுத்தது. இங்கிலாந்துப் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் வீழ்ந்தனர்.
இன்று முக்கியமான விக்கெட்டாக டோணியை 6 ரன்களுக்கு இழந்தது இந்தியா. முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களைச் சாய்த்து கவனம் ஈர்த்த சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி இன்று இந்தியாவுக்கு எமனாக வந்து சேர்ந்தார். அபாரமாக பந்து வீசிய அவர் 6 விக்கெட்களைச் சாய்த்து அசத்தி விட்டார். அதேபோல ஆண்டர்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
மொயீன் அலியின் சுழலைச் சந்திக்க முடியாமல் சுருண்ட இந்தியா, 178 ரன்களில் ஆட்டமிழந்தது. இன்றைய ஆட்டத்தின் ஒரே ஆறுதல் அஜிங்கியா ரஹானே போட்ட அரை சதம்தான். அவர் 52 ரன்களை எடுத்தார்.
மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் உள்ளன. இன்னும் 2 போட்டிகள் உள்ளன. அதை இரண்டையும் இந்தியா கைப்பற்றினால் மட்டுமே டெஸ்ட் தொடரை வெல்ல முடியும். அதே நிலைதான் இங்கிலாந்துக்கும்.