இஷாந்த் கலக்கல்
இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.
ரூட் தல
இஷாந்த் ஷர்மாதான் தற்போதைக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அனுபவம்மிக்கவர். ஜாகீர்கான் சுணக்கம் கண்டுள்ளதால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். எனவே ஜாகீருக்கு பதிலாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு இஷாந்த்துக்கு தானாக வந்தது. அதாவது, இவர்தான் ரூட் தலை. இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு இஷாந்த் ஷர்மா சோபிக்கவில்லை.
இஷாந்த் மீது விமர்சனம்
கேப்டன் டோணி உள்ளிட்டோரின் ஆதரவால் இஷாந்த், இந்திய அணியில் நீடித்து வருகிறார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இஷாந்த் இடம் பிடித்தபோதே, அங்கு இவர் என்ன சாதித்துவிட போகிறார் என்ற இளக்கார பேச்சுக்கள்தான் அதிகம் எழுந்தன. சமூக வலைத்தளங்களிலும் இஷாந்த் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகிவந்தார்.
விக்கெட்டை வீழ்த்தும் நோக்கமில்லை
இந்த விமர்சனங்களுக்கு காரணம், இஷாந்த் ஒரே மாதிரியாக பந்து வீசுவதுதான். ஆப்-ஸ்டெம்புக்கு வெளியே பந்தை குத்த செய்து, அப்படியே கீப்பருக்கு அந்த பந்து போவதை ரசிப்பதை மட்டுமே இஷாந்த் செய்து வந்தார். வாசிம் அக்ரம் போலவோ, மெக்ராத்தை போலவோ, ஒவ்வொரு பந்தையும் விக்கெட்டை வீழ்த்தும் நோக்கத்தில் அவர் வீசவில்லை என்பது குற்றச்சாட்டு.
வெங்கடேச பிரசாத் மொக்கை பவுலர்
இதுகுறித்து கல்லூரி காலங்களில் இஷாந்த் ஷர்மாவுக்கு பயிற்சியளித்த சர்வண் குமார் நிருபர்களிடம் கூறியதாவது: இஷாந்த் ஷர்மா இயல்பாக வேகமாக பந்து வீசக்கூடியவர். வெங்கடேச பிரசாத்தோ, குறைவான வேகத்தில் பந்து வீசிய வீரர். எனவே வெங்கடேச பிரசாத் தனது பந்தை, எதிரணி பேட்ஸ் மேன் அடித்து விட கூடாது என்ற ஒரே குறிக்கோளில்தான் பந்து வீசினாரே தவிர, விக்கெட்டை வீழ்த்துவதற்கு அவர் யோசித்தது கிடையாது. அதற்கான வேகமும் அவரிடம் இருந்தது கிடையாது.
கடமைக்காக பந்து வீச்சு
இஷாந்த் ஷர்மாவுக்கு பயிற்சியளித்தபோதும், வெங்கடேச பிரசாத், தனது அனுபவத்தை சொல்லி கொடுக்க ஆரம்பித்தார். எனவேதான் இஷாந்த் ஷர்மா விக்கெட்டை வீழ்த்துவதைவிட்டுவிட்டு சரியான அளவில், சரியான உயரத்தில் (லைன்&லென்த்) பந்து வீசிக்கொண்டிருந்தார். கடமைக்காக பந்து வீசுவதைப்போலத்தான் அது இருந்தது.
இஷாந்த் வேகம் குறைந்தது
வெங்கடேச பிரசாத்தின் பயிற்சி காரணமாக இஷாந்த் தனது மணிக்கட்டு பகுதியை நேராக வைப்பதை தவிர்த்துவிட்டார். நெஞ்சை நிமித்தியபடி பந்தை எறியத்தொடங்கினார். இதன்காரணமாக இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சு வேகம் குறைந்துவிட்டது. இதனால் இஷாந்த் ஷர்மாவின் தன்னம்பிக்கை தகர்ந்து, விக்கெட்டுகளை அவரால் வீழ்த்த முடியாமல் போனது.
வேகம், விவேகம் அவசியம்
அதே நேரம், தற்போதைய பந்து வீச்சு பயிற்சியாளர் ஜோ தவேஸ் இஷாந்த்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துவருகிறார். இஷாந்தின் பந்து வீச்சு முறையை வைத்து பார்க்கும்போது, மணிக்கு 135 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில், சரியான இடத்தில் பந்தை குத்தி எழுப்பினால் கைமேல் பலன் கிடைக்கும்.
இஷாந்த் வருத்தம்
இந்திய ஒருநாள் போட்டித்தொடரின்போது தன்னை தேர்வு செய்யாதது குறித்து இஷாந்த் ஷர்மாவுக்கு வருத்தம் இருந்தது. எப்போதுமே வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிக்கான அணியில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று நான் இஷாந்த்துக்கு ஆறுதல் கூறியிருந்தேன். ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ், இஷாந்தை பெரும்பாலும் ஒதுக்கி வைத்தது குறித்தும் கவலை வேண்டாம் என்று நான் கூறியிருந்தேன். ஏனெனில் புறக்கணிக்கப்படும்போதுதான், நாம் யார் என்பதை மக்களுக்கு காண்பிக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் பயிற்சியாளர் சர்வண் குமார் தெரிவித்தார்.