கிளாஸ்கோ: தென்னாப்பிரிக்கா அணி வீரரை தாக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக அரை இறுதியில் விளையாடுவதற்கு இந்திய ஹாக்கி அணி கேப்டன் சர்தார்சிங்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
காமன்வெல் போட்டிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய கேப்டன் சர்தார் சிங் எதிரணி வீரரின் முகத்தில் மோதியதாக அவருக்கு ஏற்கனவே கிளாஸ்கோ ஹாக்கி சென்டர் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று தென்னாப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த போட்டியிலும் எதிரணி வீரரை அபாயகரமாக தாக்கும் வகையில் நடந்து கொண்டதாக கேப்டன் சர்தார் சிங்-குக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
முதலில் அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தியா மேல்முறையீடு செய்ததால் பின்பு ஒரு போட்டியில் மட்டுமே விளையாட தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்டுள்ள நியூசிலாந்து அணியுடன் கேப்டன் சர்தார் சிங் இல்லாமல் இன்றைய அரை இறுதியில் இந்திய அணி விளையாடுவது பின்னடைவை ஏற்படுத்தலாம்.