லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா பெற்ற வெற்றிக்கு இஷாந்த் ஷர்மா மட்டுமே காரணம் கிடையாது, அஜிங்ய ரஹானே சதம் அடித்ததுதான் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று இங்கிலாந்து நாட்டின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்வான் நிருபர்களிடம் கூறியதாவது: இரண்டாவது இன்னிங்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதை மறுக்க முடியாது. அதே நேரம் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் ஒன்று இருந்தது. லார்ட்ஸ் மைதானத்தின் பிட்ச், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதுதான் அந்த காரணம்.
இங்கிலாந்து நினைத்ததை போலவே இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் இதுபோன்ற ஒரு வெளிநாட்டு பிட்சில் ஆடி அனுபவம் இல்லாத ரஹானே, அழகான சதத்தை அடித்து, இந்தியாவை மீட்டு எடுத்தார். களமிறங்குவதற்கு முன்பாக கண்டிப்பாக ரஹானே தனது மனதிற்குள், இந்த பிட்சில் எப்படி ஆடப்போகிறோமோ என்று நினைத்திருப்பார். இதையும் மீறி சிறப்பாக ஆடிய ரஹானேதான் என்னை பொறுத்தளவில் ஆட்ட நாயகன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.