புவனேஸ்வர்: 7வது ஐபிஎல் போட்டிகளில் சிலவற்றை வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்துவது குறித்து இந்திய கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருகிறது.
7வது ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் கால கட்டத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று உள்துறை அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இதைத் தொடர்ந்து சில போட்டிகளை தென்னாப்பிரிக்காவில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் கூடிய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், சில போட்டிகளை வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.
இருப்பினும் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்காக பொறுத்திருக்கவும் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஐபிஎல் போட்டிகள் எங்கே நடைபெறும் என்பதை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்து அறிவிக்கும்.