மும்பை: ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரம் தொடர்பாக இங்கிலாந்தில் இந்திய வீரர்களிடம் முத்கல் கமிட்டி விசாரணை எதுவும் நடத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற பிக்ஸிங் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்ய உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இக் குழுவில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நாகேஸ்வர ராவ், அஸ்ஸாம் கிரிக்கெட் சங்க உறுப்பினர் நிலாய் தத்தா, மூத்த ஐபிஎஸ் அதிகாரி பி.பி. மிஸ்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவினர் ஐ.பி.எல். போட்டியில் நடந்த பிக்ஸிங் முறைகேடு குறித்து விசாரணை செய்து வருகிறது. பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள், இது தொடர்பான வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள், வழக்கின் சாட்சிகள் ஆகியோரிடம் பல கட்டங்களாக முத்கல் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையை அண்மையில் முடித்த முத்கல் குழு, அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னைக்கு சில நாட்களுக்கு முன்பு முத்கல் குழுவினர் வந்தனர். இக் குழுவினர், தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களிடமும் முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் இதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்கல் கமிட்டி கடந்த 15-16ஆம் தேதி சென்னையில் முகாமிட்டு விசாரணை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. அதே நேரத்தில் என்.சீனிவாசன் மற்றும் மெய்யப்பனிடம் எந்த ஒரு விசாரணையையும் முத்கல் கமிட்டி நடத்தவில்லை. அத்துடன் ஊடகங்களில் வெளியானது போல் எந்த ஒரு நாட்டுக்கும் முத்கல் கமிட்டி சென்று இந்திய வீரர்களிடம் விசாரணை எதனையும் நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.