கொல்கத்தா: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது அட்லெடிகோ டி கொல்கத்தா அணி. அரை இறுதியில் கோவா அணியுடன் கொல்கத்தா அணி மீண்டும் மோத உள்ளது.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற எப்.சி. கோவா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா டிரா செய்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
கோவா அணி ஏற்கெனவே அரையிறுதிக்கு முன்னேறி விட்டது. கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் கோவா அணியின் எட்கார் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். போட்டியை டிராவில் முடித்து அரையிறுதிக்கு முன்னேறும் நோக்கத்துடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு இது பேரதிர்ச்சியாக அமைந்தது.
எனினும் ஒரு கோல் அடித்து கணக்கை சமன் செய்ய கொல்கத்தா வீரர்கள் தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் முதல் பாதி ஆட்டத்தில் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
2வது பாதியில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். கொல்கத்தா வீரர்கள் தீவிர முயற்சிக்கு 68-வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. அந்த அணியின் ஃபிக்ரு டிபிரே கோல் அடித்தார்.
இதனால் 1-1 என கோல் கணக்கு சமநிலை பெற்றது. அதன்பின் ஆட்ட நேர இறுதிவரை இரு அணிகளால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
கொல்கத்தா அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் கொல்கத்தா அணி மீண்டும் கோவா அணியை எதிர்கொள்ள இருக்கிறது.