பஞ்சாப்புடன் மோதல்
இந்நிலையில் மொஹாலியில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான ஹோர்ட் ஹரிகேன்சும் மோதின. டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்து சீரான வேகத்தில் ரன்கள் எடுத்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஜோனதன் வெல்ஸ், டிராவிஸ் பிர்ட் தலா 28 ரன்களும், பிளிஸ்சாட் 27 ரன்களும், பென் டங் 26 ரன்களும், சோயிப் மாலிக் 14 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
சேவாக் கோல்டன் டக்-அவுட்
பின்னர் 145 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய பஞ்சாப்புக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் பந்தை தூக்கியடித்து, எல்லைக்கோடு அருகே நின்ற பீல்டர் பாய்சிடம் கேட்ச் ஆனார். 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல் ஓவரிலேயே ஷேவாக் அவுட் ஆவது இது 14வது முறையாகும்.
மேக்ஸ்வெல் அதிரடி
தொடர்ந்து விருத்திமான் சஹா (11 ரன்), டேவிட் மில்லர் (0), மனன் வோரா (18 ரன்) ஆகியோர் சீக்கிரம் வெளியேற்றப்பட்டாலும் அதிரடி மன்னன், மேக்ஸ்வெல் அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் தனது பங்குக்கு 43 ரன்கள் (25 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.
கேப்டன் ஜார்ஜ் பெய்லியின் பொறுப்பு
இதன் பிறகு கேப்டன் ஜார்ஜ் பெய்லியும் (34 ரன், 27 பந்து, 5 பவுண்டரி), திசரா பெரேராவும் (35 ரன், 20 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) இணைந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். பஞ்சாப் அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் மேக்ஸ்வெல் மற்றும் ஜார்ஜ் பெய்லி ஆகிய இருவரும் ஆஸ்திரேலிய வீரர்களாகும். அவர்கள் பஞ்சாப் அணிக்காக முழு அர்ப்பணிப்புடன் விளையாடி போட்டியை வசப்படுத்தியுள்ளனர்.