மொஹாலி: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியில், இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் நார்தன் டிஸ்டிரிக்ஸ் அணிகள் மோதுகின்றன.
பஞ்சாப் அணி ஏற்கனவே விளையாடிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் ஷேவாக், மேக்ஸ்வெல், பெய்லி ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்து வீச்சும் சிறப்பாக இருக்கிறது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
நியூசிலாந்தை சேர்ந்த நார்தன் டிஸ்டிரிகிஸ் அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று உள்ளது.
அந்த அணியில் வில்லியம்சன், பிளைன், ஸ்டாரிஸ், போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பில் நார்தன் அணி இருக்க முடியும். இதனால் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும்.
முன்னதாக இன்று மாலை 4 மணிக்கு மொஹாலியில் தொடங்கியுள்ள ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகளின் பார்போடர்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கேப் கோபராஸ் அணிகள் களமிறங்கியுள்ளன. டாசில் வென்ற கோப்ராஸ் முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
இரு அணிகளும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை. கோபராஸ் 2 ஆட்டத்திலும், பார்போடாஸ் அணி தான் மோதிய ஒரு ஆட்டத்திலும் தோல்வியை தழுவின. இதனால் முதல் வெற்றிக்காக இரு அணி அணிகளும் கடுமையாக போராடிவருகின்றன.