ரெய்னா, டு பிளெசிஸ் சொதப்பல்
கொல்கத்தா அணி டாசில் வெற்றி பெற்றதையடுத்து கேப்டன் கவுதம் கம்பீர் சென்னையை பேட் செய்ய அழைத்தார். சென்னையின் தொடக்க ஆட்டக்காரர் வெய்ன் சுமித் 20 ரன்னிலும், பிரண்டன் மெக்கல்லம் 22 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். சென்னையின் நம்பிக்கை நட்சத்திரங்களான சுரேஷ் ரெய்னா 28 ரன்னிலும், பாப் டு பிளெசிஸ் 14 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
டோணி, பிராவோ ஜோடி
அணி தடுமாறிய நிலையில், 5வது விக்கெட்டுக்கு கேப்டன் டோணியும், ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோவும் ஜோடி சேர்ந்தனர். எதிரணியின் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து துவைத்த இந்த ஜோடி சுழற்பந்தில் ரொம்பவே தடுமாறியது. மேற்கிந்திய தீவுகளின் சுனில் நரைன் ரன் ரேட்டை வெகுவாக கட்டுப்படுத்தினார்.
நச்சென்று பந்து வீசிய நரைன்
சுனில் நரைன் 4 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து சுரேஷ் ரெய்னா விக்கெட்டையும் கைப்பற்றினார். அதே போல் இந்திய சுழற் பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா 4 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து ஸ்மித் மற்றும் டு பிளெசிஸ் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது சென்னை அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
சுழலில் சிக்கி சின்னாபின்னமான சென்னை
கொல்கத்தா அணி 11 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்து வீசியது. இதில் சென்னை வீரர்கள் 51 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். ஆனால் கொல்கத்தாவின் வேகப்பந்து வீச்சில் 9 ஓவர்களில் 104 ரன்களை விளாசிய சென்னை, விக்கெட் எதையும் பறிகொடுக்கவில்லை.
இமாலய சிக்சர்
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. டோனி 35 ரன்களுடனும் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), பிராவோ 28 ரன்களுடனும் (28 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். உமேஷ் யாதவ் வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தை 101 மீட்டர் தூரத்துக்கு சிக்சர் விரட்டி அசத்தினார் டோணி. கொல்கத்தா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளும், சுனில் நரைன், யூசுப் பதான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
51 ரன்னுக்கு பாதி அணி காலி
158 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடியது. கேப்டன் கவுதம் கம்பீர் (6 ரன்), அடுத்து வந்த மனிஷ் பாண்டே (0), பிஸ்லா (2) ஆகியோர் ஆஷிஷ் நெஹ்ராவின் அபார பந்து வீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். யூசுப் பதான் (1 ரன்), சூர்யகுமார் யாதவ் (19 ரன்) ஆகியோரும் அதிவிரைவில் பெவிலியன் திரும்ப 51 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா தத்தளித்தது. தோல்வி பயம் கம்பீர் முகத்தில் எட்டிப்பார்த்தது. 'கே.கே.ஆர்' என ரசிகர்கள் எழுப்பிய கோஷம் மெல்ல மெல்ல காற்றில் கரைந்தது. பலரும் ஸ்டிடேயத்தை விட்டு கிளம்ப ஆரம்பித்தனர்.
ரஸ்செல், ரையான் ஜோடி
அப்போதுதான் அந்த திருப்புமுனை நிகழ்ந்தது. சென்னையின் கை ஓங்கியிருந்த சூழலில் கைகோர்த்த ரையான் டென்டஸ்சாட்டும் (நெதர்லாந்து), ஆந்த்ரே ரஸ்செலும் (மேற்கிந்திய தீவு) நிலைமையை புரட்டிப்போட்டனர். சிக்சரும், பவுண்டரியுமாக வெளுத்து கட்டிய ரஸ்செல் அணியை தூக்கி நிறுத்தினார். ஸ்கோர் 131 ரன்களை எட்டிய போது, ரஸ்செலை கிளீன் போல்ட் ஆக்கியதன் மூலம் இந்த ஜோடியை நெஹ்ரா பிரித்தார். ரஸ்செல் இருபத்தைந்தே பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். இதில் 4 பவுண்டரி, 5 சிக்சர்கள் அடங்கும்.
கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்கலை
அடுத்து வந்த கம்மின்ஸ் (8 ரன்) ரன்-அவுட் ஆனாலும், டென்டஸ்சாட் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். கொல்கத்தா அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. டென்டஸ்சாட் 51 ரன்களுடன் (41 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் நின்றார். நெஹ்ரா 4 விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லாமல் போய் விட்டது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் டால்பின்ஸ் அணியை 22ம் தேதி எதிர்கொள்கிறது.அணியின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருவர் இல்லாமலே கம்பீர் அணி கம்பீரமாக எழுந்து நின்றுள்ளது.