சென்னை: ஐ.பி.எல். பிக்ஸிங் விவகாரத்தில் தம் மீது உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலக டோணி முடிவு செய்து ஆலோசனை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளின் போது வீரர்கள், அணி நிர்வாகிகள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது தொடர்பாக முத்கல் கமிட்டி விசாரணை நடத்தியது. இந்த கமிட்டியின் விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
முத்கல் கமிட்டி அறிக்கை மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பனை பாதுகாக்கும் வகையில் வாக்குமூலம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.
மேலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்த என்.சீனிவாசனுக்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள், கிரிக்கெட் வாரிய நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தும் இருந்தது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக இருக்கிறார் டோணி.
இப்படி தொடர் நெருக்கடிகள் ஏற்பட்ட நிலையில் டாக்காவில் உள்ள டோணி, என். சீனிவாசனை நேற்று காலை தொடர்பு கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்தும் இந்தியா சிமெண்ட்ஸ் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்ய விரும்புவதாக குறியிருக்கிறார்.
ஆனால் டோணியின் இந்த கருத்து உடனே ஏற்றுக் கொள்ளப்படவில்லை.. இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.. விரைவில் ஒரு முடிவு தெரியவரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.