மும்பை: முதலாவது புரோ கபடி லீக் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு மாத காலமாக புரோ கபடி லீக் போட்டி நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் இதில் பங்கேற்றன.
குரூப் சுற்றில் முதல் 4 இடங்களைப் பிடித்த மும்பை, ஜெய்ப்பூர், பாட்னா, பெங்களூரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
மும்பை- ஜெய்ப்பூர் மோதல்
மும்பையில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சான் உரிமையாளராக உள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், யுனெடெட் மும்பை அணியும் மோதின.
அசத்தல் வெற்றி
இந்த தொடரின் முதலில் இருந்தே அபாரமாக ஆடி வரும் ஜெய்ப்பூர் அணி இறுதி ஆட்டத்திலும் அசத்தலாக ஆடி 35-24 என வெற்றி பெற்றது.
மணீந்தர்சிங்
ஜெய்ப்பூர் அணிக்கு மணீந்தர் சிங் முதல் "ரைடு' சென்று ஒரு புள்ளியைப் பெற்று வந்தார். ஜெய்ப்பூர் அணி ஒரு கட்டத்தில் மும்பை அணியின் அனைத்து வீரர்களையும் வெளியே அனுப்பி முதல் "லோனா' புள்ளியைப் பெற்றது. இதன் மூலம் 13- 7 என ஜெய்ப்பூர் முன்னிலை பெற்றது.
முதல் பாதியில் முன்னிலை
முதல் பாதி முடிவில் ஜெய்ப்பூர் 18 புள்ளிகளும், மும்பை 14 புள்ளிகளும் பெற்றிருந்ததால், இரண்டாவது பாதி விறுவிறுப்பாக இருந்தது.
அபாரம் ஜஸ்வீர்சிங்
ஆட்டம் முடிவதற்கு 10 நிமிடங்கள் இருந்தபோது ஜெய்ப்பூர் அணியின் ரைடர் ஜஸ்வீர் சிங் ஒரே ரைடில் நான்கு புள்ளிகளைப் பெற்றுத் தந்தார். அத்துடன் ஜெய்ப்பூர் அணிக்கு 2-வது லோனா புள்ளி கிடைத்தது.
வென்றது ஜெய்ப்பூர்
முடிவில் ஜெய்ப்பூர் அணி வெற்றி வாகை சூடியது.
பெங்களூருவை வீழ்த்திய பாட்னா
முன்னதாக நடைபெற்ற 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 29-22 என்ற புள்ளிக் கணக்கில் பாட்னா அணி பெங்களூரு அணியை வீழ்த்தியது.