பயிற்சியாளர் மாற்றம்
அவர் கடந்த பத்தாண்டுகளாக புல்லேலா கோபிச்சந்திடம் பயிற்சி பெற்று வந்த நிலையில், பெங்களூரில் விமல்குமாரிடம் பயிற்சி பெறப்போவதாக சாய்னா அறிவித்திருந்தார். ஆசிய விளையாட்டு போட்டித்தொடர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு விமல்குமாரின் பயிற்சி மிகவும் உதவும் என்று நம்புகிறேன் என்று சாய்னா தெரிவித்தார்.
ஆச்சரியம்
இனிடையே, சாய்னாவின் இந்த முடிவு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோபிச்சந்த் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் நான் இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தற்போது சாய்னாவின் குறிக்கோள் முழுக்க ஆசிய கோப்பை மீதே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். போட்டித் தொடர் முடிந்த பிறகு நான் இதுகுறித்து கருத்து தெரிவிக்கிறேன்" என்றார்.
சொதப்பும் சாய்னா
24 வயதான சாய்னாவுக்கு கடந்த 10 வருட காலமாக கோபிச்சந்த் பயிற்சியளித்து வருகிறார். இருப்பினும் கடந்த இரு ஆண்டுகளாக சாய்னா பெரிதாக எதையும் சோபிக்கவில்லை என்பதுடன், அடிக்கடி காயத்தில் சிக்கிக் கொள்கிறார். எனவே தனது பயிற்சியாளரை சாய்னா மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பு முனையாகுமா?
முக்கியமான நேரத்தில் எடுத்துள்ள இந்த முடிவில் சாய்னா வெற்றிபெற்றால் அது அவருக்கு புது வாழ்க்கையை தரும். ஒருவேளை ஆசிய போட்டித் தொடரில் சோபிக்க தவறினால் அவரது இந்த முடிவு பெரும் விமர்சனங்களை சந்திக்கும்.