பெர்லின்: உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகளில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்தவரான ஜெர்மனி வீரர் மிரஸ்லோவ் குளோஸ் கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இவர் சமீபத்தில் நடந்த பிரேசில் கால்பந்துப் போட்டித் தொடரின்போது தனது 16 ஆவது உலக்க கோப்பைக் கோலை அடித்து அதற்கு முன்பு இந்த சாதனையை வைத்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவை முந்தியடித்தார் என்பது நினைவிருக்கலாம்.
36 வயதான குளோஸின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால் ஜெர்மனி உலகக் கோப்பையையும் வென்றது.
தற்போது குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 990க்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்மன் வீரர்கள் உள்ள நிலையில், அணியின் முன்னணி வீரரான குளோஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். ஜெர்மனி தேசிய அணியில் இருந்தும் அவர் விலகி விட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பிரேசில் நாட்டில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் எனது சிறுவயது கனவு நிறைவேறியுள்ளது. ஜெர்மனியின் தேசிய அணிக்காக விளையாடிய தருணங்களை மறக்க முடியாது. எனது சிறந்த கோலையும் அடித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார் குளோஸ்.
2002 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் குளோஸ், 5 கோல்கள் அடித்தார். அதில் பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது. 2006 போட்டித் தொடரில் 5 கோல்கள் அடித்தார். 2010ல் 4 கோல்களும், 2014 தொடரில் 2 கோல்களும் போட்டார் குளோஸ்.
நான்கு உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களில் கோல்கள் அடித்த அரிதான வீரர் குளோஸ். இதற்கு முன்பு பிரேசில் வீரர் பீலே, உவே சீலர் ஆகியோர்தான் இப்படி விளையாடியுள்ளனர்.
ஜெர்மனி வீரராக 137 போட்டிகளில் ஆடி 71 கோல்களையும் அடித்து ஜெர்மனியின் அதிக கோலடித்த வீரராகவும் விளங்குகிறார் குளோஸ்.