இன்சியான்: இந்தியர்கள் அனைவரும் மங்கள்யான் வெற்றியால் சந்தோஷத்தில் மூழ்கியுள்ள நிலையில் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு, தென் கொரியாவில் ஒரு சோதனை வந்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கி பி பிரிவு போட்டியில் பாகிஸ்தானிடம் தேவையில்லாமல் தோற்றுப் போயுள்ளது இந்தியா.
கோலடிக்க கிடைத்த வாய்ப்பையெல்லாம் அனாவசியாக வீணடித்து விட்ட இந்தியா கடைசியில் 1- 2 என்ற கணக்கில் பாகிஸ்தானிடம் தோற்றுப் போனது.
இந்த் தோல்விக்கு பாகிஸ்தானியர்கள் சிறப்பாக விளையாடினார்கள் என்று கூறுவதை விட இந்தியர்கள் தங்களுக்குக் கிடைத்த அருமையான வாய்ப்புகளை வீணடித்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.
இரு அணிகளுமே இன்று சிறப்பாக விளையாடின. ஒருவரை ஒருவர் டெக்னிக்கலாகவும், திறமையுடனும் சமாளித்து அசத்தினர். இதனால் கோல்கள் விழுவது கடினமாக இருந்தது. இந்தியாவுக்குப் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அதை சில பார்வர்ட் வீரர்கள் தவற விட்டு விட்டனர். அதேபோல பேக்லைனிலும் இந்தியா இன்று சொதப்பி விட்டது.
சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணியினர் உத்வேகத்துடன் ஆடிய போதிலும் கூட பரம்பரை வைரியான பாகிஸ்தானின் திறமை சற்று கூடுதலாக இருந்ததால் அவர்களிடம் பணிந்து போக வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் கிட்டத்தட்ட அரை இறுதிக்குத் தகுதி பெற்று விட்டது. அதேசமயம் பி பிரிவில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு இன்னும் முழுமையாக அரை இறுதிக்கான வாய்ப்புகள் உறுதியாகவில்லை. சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் சீனாவை அது கோல்கள் அதிகம் அடித்து வெல்ல வேண்டும். அப்போதுதான் அரை இறுதி குறித்து நினைத்துப் பார்க்க முடியும்.