31 வருடங்களுக்குப் பிறகு
ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே 31 வருடங்களுக்குப் பிறகு தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக 1983ம் ஆண்டு
கடைசியாக 1983ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது ஜிம்பாப்வே. அந்தத் தொடரில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையைத் தட்டிச் சென்றது என்பது நினைவிருக்கலாம்.
சிகும்பரா அபாரம்
சிகும்பரா 52 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரும் பிராஸ்பர் உத்சயாவும் இணைந்து 55 ரன்களைக் குவித்தனர்.
2 ஓவர் மிச்சம் வைத்து
முன்னதாக 210 என்ற வெற்றி இலக்கை ஜிம்பாப்வே துரத்தியது. கடைசி 2 ஓவர்கள் மீதம் இருக்கையில் ஜிம்பாப்வே 7 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றியை சுவைத்தது.
முதல் போட்டியில் முத்தாய்ப்பு
1983ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியின்போது டிரன்ட் பிரிட்ஜில் நடந்த போட்டியில் இரு அணிகளும் சந்தித்தன. அதுதான் அந்த அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியும் ஆகும். அதில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அதன் பின்னர் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததே இல்லை. இப்போதுதான் அது தனது 2வது வெற்றியை சந்தித்துள்ளது.
ஆஸி போட்ட தப்புக் கணக்கு
முன்னதாக ஜிம்பாப்வே அணியுடனான நேற்றைய போட்டியில் பல தப்புக் கணக்குகளைப் போட்டு விட்டது ஆஸ்திரேலியா. இதுவே தோல்விக்கு முக்கியக் காரணம். மிட்சல் ஜான்சனை அணியில் சேர்க்கவில்லை. ஆல் ரவுண்டர் ஸ்டீவ் ஸ்மித்தையும் சேர்க்காமல் விட்டு விட்டனர். மேலும் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் போட்டியின்போது மீண்டும் காயமடைந்தார். தற்போது அவர் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புகிறார்.
தென் ஆப்பிரிக்காவை வென்றால்தான்
இந்தத் தோல்வி காரணமாக நாளை தென் ஆப்பிரிக்காவுடன் நடைபெறும் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றாக வேண்டும். அப்படி ஜெயித்தால்தான் அது சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும்.