இஸ்லாமாபாத்: டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சாகித் அப்ரிடி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்க தேசத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றிலேயே தோல்வி கண்டது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன் பதவியில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் முகமது ஹபீஸ் விலகினார்.
இந்த நிலையில் டி20 போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சாகித் அப்ரிடி மீண்டும் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் 2016ம் ஆண்டில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிவரை அப்ரிடி கேப்டனாக தொடருவார் என்று தெரிவித்துள்ளது.
அதே நேரம் ஒருநாள் போட்டிகளுக்கான அணி கேப்டனாக மிஸ்பா-உல்-ஹக் தொடருவார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இவரது தலைமையிலேயே பாகிஸ்தான் சந்திக்க உள்ளது.
2009 முதல் 2011வரை பாகிஸ்தான் டி20 கிரிக்கெ் அணிக்கு அப்ரிடி கேப்டனாக பதவி வகித்தார். பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான மோதலுக்கு பிறகு 2011ல் அப்ரிடி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இவரது தலைமையில் 19 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடி அதில் 8 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.