மொஹாலி: சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளை பார்க்க மொஹாலி மைதானத்தில் ரசிகர்கள் அதிக அளவில் வராததால் நாற்காலிகளில் ஈயாடின.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று இரவு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின் 2வது ஆட்டத்தில் உள்ளூர் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியும் மோதின.
ஆனால் 28 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட மொஹாலி மைதானத்தில் பாதி இருக்கைகள்கான் நிரம்பியிருந்தன. அதே நேரம் சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டிகளின்போது மைதானம் நிரம்பி காணப்பட்டது.
இதுகுறித்து போட்டியை பார்க்க வந்த பள்ளி மாணவன் அன்குஷ் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளின்போது செய்யப்பட்ட விளம்பரம் தற்போது அளிக்கப்படாதது கூட்டம் குறைய காரணமாக இருக்கலாம் என்றார்.
மற்றொரு ரசிகர் ஹர்மீத் சிங் கூறுகையில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி குறித்து பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாதது ரசிகர்களின் குறைவான வருகைக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.