டெல்லி: லலித் மோடி போட்டியிட்ட ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். நிதி முறைகேடு தொடர்பாக ஆயுட்கால தடை விதிக்கப்பட்டவர் முன்னாள் தலைவர் லலித்மோடி. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்பையும் மீறி ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் லலித் மோடி போட்டியிட்டார்.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் லலித் மோடி போட்டியிட்டதை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 19-ந் தேதி நடந்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தேர்தல் வாக்குப்பதிவுகள் சீல் வைக்கப்பட்ட பெட்டியில் அடைத்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், லலித்மோடி தலைவராக தேர்வு செய்யப்பட்டால் தான் இந்த மனு மீதான விசாரணைக்கு தேவை எழும் என்றும், நிர்வாகிகள் தேர்தல் முடிவு 17-ந் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்து இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் தேவ், கேகர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தேர்தல் முடிவு வெளியிடுவதை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தனர். இதனால் 27-ந் தேதி வரை ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.