சபாஷ் சஞ்சய்
நியமனத்தை விடுவோம். சஞ்சய் பாங்கர் உண்மையிலேயே ஒரு அருமையான ஆல் ரவுண்டர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அதேசமயம், அவர் தான் ஒரு சிறப்பான பயிற்சியாளர் என்பதை ஐபிஎல் போட்டியில் நிரூபித்தவர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார் பாங்கர்.
அதிரடி வெற்றிகள்
பாங்கர் ஆலோசனையின் கீழ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலுமே கலக்கியது. கிளன் மேக்ஸ்வெல் ஒருபக்கம் அதிரடியாக ஆடினாலும் கூட ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக ஆடி பல வெற்றிகளை குவித்தது. இதற்கு பாங்கரின் சிறப்பான வழி நடத்தல்தான் முக்கியக் காரணம் என்று அனைவருமே பாராட்டினார்கள்.
சாஸ்திரி போலவே இவரும் மகாராஷ்டிராக்காரர்!
ரவி சாஸ்திரியைப் போலவே பாங்கரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்தான். இந்தியாவுக்காக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.
இந்தியாவை இங்கிலாந்தில் வெல்ல வைத்தவர்
பாங்கருக்கும், இங்கிலாந்துக்கும் ஒரு சின்ன ராசி உண்டு. 2002ம் ஆண்டு அங்கு இந்தியா டூர் போயிருந்தது. அப்போது ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இவரை ஓப்பனிங் இறக்கினர். இவரும் டிராவிடும் சேர்ந்து மிக மிகப் பொறுமையாக முதல் விக்கெட்டுக்கு ரன் சேர்த்தனர். முதல் நாள் முழுவதும் மகா பொறுமையுடன் ஆடி பாங்கர் 68 ரன்களைச் சேர்த்தார். பின்னர் பந்து வீச்சில் 2 விக்கெட்களைச் சாய்த்தார். அப்போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்று ஆச்சரியப்படுத்தியது!
2004 முதல் விளையாடவில்லை
2004ம் ஆண்டு முதல் பாங்கர் அணியில் இடம் பெறவில்லை. அணியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். ஆனால், 2004-05 ரஞ்சி தொடரில் ரயில்வேஸ் அணியின் கேப்டனாக கோப்பையை வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
ஐபிஎல்லில் 3 அணிகள்
ஐபிஎல்லின் முதல் சீசனின்போது இவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்றார். பின்னர் 2009 ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வீரராக இடம் பெற்று ஆடினார். தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.
அனுபவம்
பாங்கர் 12 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒரு நாள் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் உள்பட 470 ரன்களை எடுத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 180 ரன்களை எடுத்துள்ளார்.
அழித்ததும் பிசிசிஐயே.. ஆக்குவதும் அதுவே
இந்திய அணியில் பெரிய ரவுண்டு வந்திருக்க கூடியவர்தான் பாங்கர். ஆனால் என்ன காரணத்தாலோ பாங்கர் ஓரம் கட்டப்பட்டார். அதிக வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது அதே பிசிசிஐ கூப்பிட்டு பணியில் அமர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.