இன்சியான்: ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் வென்ற வெண்கலப்பதக்கத்தை திருப்பியளித்த இந்திய வீராங்கனை சரிதா தேவி மீது அகில இந்திய குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை அரையிறுதியில் தென்கொரிய வீராங்கனை ஜினா பார்க்கிற்கு ஆதரவாக செயல்பட்டார் நடுவர். இதனால் அநீதி இழைக்கப்பட்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலப்பதக்கத்தை வாங்க மறுத்தார்.
மேலும் பதக்கம் அளிக்கும் மேடையில் நின்று கொண்டு தனக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தாங்க முடியாமல் கதறி அழுதார்.
அரையிறுதியில் ஜினா பார்க் என்ற கொரிய வீராங்கனையை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை சரிதா தேவி அபாரமாக விளையாடினார். ஜினா பார்க் வெற்றி பெற வாய்ப்பேயில்லை என்ற நிலையில் சரிதா தேவி வெற்றிப் பதக்கத்தை நிச்சயம் எதிர்பார்த்தார்.
ஆனால் நடுவர் சற்றும் எதிர்பாராத வகையில் தென் கொரிய வீராங்கனை ஜினா பார்க் வென்றதாக அறிவிக்க அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து சரிதா தேவியின் கணவர் தோய்பா சிங் கடும் கோபமடைந்து நடுவரை நோக்கி திட்டியபடியே குத்துச் சண்டை வளையத்திற்குள் நுழைய முயன்றார்.
அநீதி இழைக்கப்பட்டது
சரிதா தேவி பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அழுதபடியே கூறும்போது, "எனக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது. ஜினா பார்க்கிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது என முன் கூட்டியே முடிவெடுத்து விட்டார்கள். இப்படித்தான் தீர்ப்பு என்றால் எங்களை ஏன் விளையாட விட்டிருக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
நடுவர்கள் மறுப்பு
இதனையடுத்து இந்திய அணி நிர்வாகம் சரிதா தேவி அநீதி முடிவை எதிர்த்து முறையீடு செய்தனர். ஆனால் அங்கும் நீதி கிடைக்கவில்லை. நடுவர் தீர்ப்பை மாற்ற முடியாது என்று கூறி மறுத்து விட்டனர்.
கதறி அழுத சரிதா
இதனையடுத்து இன்று பதக்க நிகழ்ச்சிக்கு கண்ணீருடன் வந்த சரிதா தேவி பதக்க மேடையில் கதறி அழுதார். வெண்கலப் பதக்கத்தை அணிய அவர் மறுத்து விட்டார். கொரிய வீராங்கனையை அழுதபடியே தழுவிய சரிதா தேவி பதக்கத்தை அவரிடம் கொடுத்தார்.
வெளியேறிய சரிதா
முன்னாள் ஆசிய மற்றும் உலக சாம்பியனான சரிதா தேவி மனமுடைந்த நிலையில் பதக்கமளிப்பு நிகழ்ச்சியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.
இணையத்தில் ஆதரவு
இதனிடையே, சரிதா தேவிக்கு ஆதரவாக இணையத்தில் ஆதரவு குரல் பெருக்கெடுக்கத் தொடங்கியுள்ளது. ட்விட்டரில் #saritadevi என்ற ஹேஷ்டேக்கில் நிமிடத்துக்கு நூற்றுக்கணக்கான பதிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை
ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் வென்ற வெண்கலப்பதக்கத்தை திருப்பியளித்த இந்திய வீராங்கனை சரிதா தேவி மீது அகில இந்திய குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக, சரிதா தேவியின் கணவர் 400 அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.