அபுதாபி: ஐ.பி.எல்.7வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் தோல்வி அடைவதற்கு மோசமான பந்துவீச்சுதான் காரணம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி கொந்தளித்துள்ளார்.
ஐ.பி.எல்.7வது போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இமாயல ரன்களை சென்னை அணி குவித்திருந்தது. ஆனால் அதை எளிதாக பஞ்சாப் அணி சேஸிங் செய்யும் வகையில் சென்னையின் பந்துவீச்சு இருந்தது. இதனால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது.
இது தொடர்பாக கேப்டன் டோணி கூறியதாவது:
நாம் 200 ரன்கள் குவிக்கும் போது, எதிரணியாலும் 200 ரன்கள் எடுக்க வாய்ப்பிருப்பதை மறந்து விடக்கூடாது. இது அருமையான ஆடுகளம். அவர்கள் உண்மையிலேயே பேட்டிங்கில் அசத்தினர்.
வெற்றிக்கான அனைத்து தகுதியும் அவர்களுக்கு உண்டு. பந்து வீச்சில் நாங்கள் இதைவிட சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் தங்களது பணியை நேர்த்தியாக செய்தனர். அதே சமயம் பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு வீரருக்கு எதிராகவும் தனித்தனி வியூகங்களை அமைத்து செயல்பட்டிருக்க வேண்டும்.
சரியான திசையில் துல்லியமாக பந்து வீசுவது எப்போதும் முக்கியம். நமது இலக்கு ஒரு இஞ்ச் தவறினாலும், பந்து ரன்னாக மாறிவிடும். ஆடுகளத்தில் பந்து அதிகமாக சுழன்று திரும்பவில்லை. இதனால் பவுலர்கள் சிரமப்பட்டனர்.
இவ்வாறு டோணி கூறினார்.
ஜார்ஜ் பெய்லி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், சென்னை அணி 230 ரன்களை நோக்கி பயணிப்பது போல் தெரிந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் கொஞ்சம் கட்டுப்படுத்தி விட்டோம். நாங்கள் பேட்டிங்கை தொடங்குவதற்கு முன்பாக, நம்மால் முடியும் என்ற மனநிலையுடன் முயற்சி செய்யுங்கள் என்று வீரர்களை அறிவுறுத்தினேன்.
மேக்ஸ்வெல்லின் பேட்டிங் அசாதாரணமானது. இது மாதிரியான ஆட்டங்களை அடிக்கடி பார்க்க முடியாது. என்றாலும் இது போன்று அவர் மறுபடியும் கலக்குவார் என்று நம்புகிறேன் என்றார்.