கோபன்ஹேகன்: உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து மற்றும் சாய்னா மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள், டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2வது சுற்றில் களம் கண்ட இந்திய இளம் வீராங்கனை பி.வி.சிந்து, ரஷ்யாவின் ஓல்கா - வை சந்தித்தார். 40 நிமிடங்களுக்கு நீடித்த ஆட்டத்தில் சிந்து 21-12, 21-7 என்ற நேர் செட்களில் ஓல்காவை தோற்கடித்து 3வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதேபோல மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நேஹ்வாலும் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். ரஷ்யாவின் நிட்டாலியாவை 21-11 மற்றும் 21-9 என்ற நேர் செட்களில் சாய்னா நேஹ்வால் தோற்கடித்து 3வது சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் செயாகா தகாசாயி மற்றும் பல்கேரியாவின் பீட்டியா நிடல்சியா ஆகியோர் நடுவேயான போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களை எதிர்த்து சாய்னா நேஹ்வால் களம் காண உள்ளார்.
மகளிர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஜூவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 16-21, 8-21 என்ற நேர் செட்டில் சீனாவின் ஒய்ங் டின்-யுன்லி ஷா ஜோடியிடம் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.