முன்னாள் விடுதலைப் புலிகள் 40 பேருக்கு சிங்கப்பூரில் வேலை... இலங்கை அரசு அறிவிப்பு
கொழும்பு: மீள்வாழ்வு தொழிற்பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற முன்னாள் விடுதலைப் புலி வீரர்கள் 40 பேருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
தனி ஈழம் கேட்டு இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த போரில் விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த சுமார் 12 ஆயிரம் பேர் ஆயுதங்களை கைவிட்டு ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், மேலும் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டது.
அவ்வாறு இலங்கை ராணுவம் வசமிருந்த விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசின் சார்பில், மீள்வாழ்வு தொழிற்பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டது. அம்முகாம்களில் தச்சுத்தொழில், கட்டுமானப் பணி போன்ற தொழில்கள் கற்றுத் தரப்பட்டது
அதனைத் தொடர்ந்து பயிற்சி பெற்ற 1,773 பேர்களுக்கு புதிய தொழில் தொடங்க அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் வழங்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இது தவிர, முன்னாள் விடுதலைப் புலிகளுக்கு வெளி நாடுகளில் வேலை பெற்றுத் தரும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளதாகவும், இதில் முதல் கட்டமாக 40 பேருக்கு வேலை வழங்க சிங்கப்பூரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் இந்த மீள்வாழ்வு பயிற்சி திட்டத்துக்கு ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் ராணுவ மேஜர் ஜெனரல் ஜகத் விஜெதிலகே தெரிவித்துள்ளார்.