ராஜபக்சேவுடன் சு.சுவாமி தலைமையிலான பாஜக குழு திடீர் சந்திப்பு!
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான பாரதிய ஜனதா குழு கொழும்பில் நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளது. இந்த சந்திப்பின் போது இலங்கையுடன் பிரதமர் மோடி நல்லுறவையே விரும்புவதாக கூறியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற முதலே இலங்கை அதிபர் ராஜபக்சே கொஞ்சம் நடுங்கித்தான் கிடந்தார். இலங்கை விவகாரத்தில் முந்தைய மன்மோகன்சிங் அரசைப் போல மோடி அரசு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியது.
இதனால் இந்தியாவை தங்களது பக்கம் சாய்க்கும் ராஜதந்திர நடவடிக்கைகளை ராஜபக்சே அரசு மேற்கொண்டது. இதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி மூலம் ஒரு குழு இலங்கை சென்றுள்ளது.
யார் யார்?
அக்குழுவில் சேஷாத்ரி சாரி, பாரதிய ஜனதாவின் வெளியுறவு கொள்கை செயலாளர் சுரேஷ் பிரபு, முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்வபன் தாஸ்குப்தா, மாதவன் நலாபாத் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
இலங்கை குழு..
பாரதிய ஜனதாவின் இந்த குழுவினர் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகர் சனிமல் பெர்னாண்டோ ஆகியோரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ராஜபக்சேவுடன் சந்திப்பு
பின்னர் ராஜபக்சேவையும் சுப்பிரமணியன் சுவாமி குழு சந்தித்து பேசியது. அப்போது இலங்கையுடன் நல்லுறவை மேற்கொள்ளவே இந்திய பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்று ராஜபக்சேவிடம் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.
தமிழர் நலன்
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உளள தமிழர்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் மும்மொழி தேசிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் சுவாமி குழு வலியுறுத்தியது.
இந்தியாவில் ஆய்வு மையம்
அதே நேரத்தில் இந்தியாவில் கடல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள் சிறப்பு மையம் அமைக்க விரும்புவதாக ராஜபக்சே, சு.சுவாமி குழுவிடம் கூறியுள்ளார்.
ஏற்பாடு செய்தது யார்?
இந்த பயணத்தை சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில் ஏற்பாடு செய்தாரா? அல்லது பாஜக தலைமையே இக்குழுவை அனுப்பி வைத்ததா? அல்லது மத்திய அரசு அனுப்பி வைத்ததா? என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.