புலம் பெயர் தமிழர் நிதி உதவி.. இலங்கை செஞ்சோலை, பாரதி, அன்பு இல்ல சிறார்களின் கல்வி சுற்றுலா!
யாழ்ப்பாணம்: இலங்கையில் வடக்கு - கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பான நெர்டோ நடத்தி வரும் செஞ்சோலை, பாரதி, அன்பு இல்லங்களின் சிறார்கள் கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இலங்கையில் நெர்டோ சார்பில் வடக்கு கிழக்கில் அன்பு இல்லம், பாரதி', செஞ்சோலை ஆகிய இல்லங்கள் நடத்தப்படுகிறது. இதில் போரில் மரணித்த விடுதலைப் புலிகள், பொதுமக்களின் பிள்ளைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்கள் கிழக்கு மாகாணத்துக்கான சுற்றுலாப் பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். மொத்தம் 215 சிறுவர்கள் இந்த பயணத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருகோணமலை கிண்ணியா
இந்த சுற்றுலா பயணத்துக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதி உதவி வழங்கினர். முதல் நாளன்று திருகோணமலை, கிண்ணியா வெந்நீரூற்றுப் பகுதியினை சிறுவர்கள் சென்று பார்வையிட்டனர்.
நிலாவெளி
பின்னர் நிலாவெளியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஆலயத்தில் வழிபாடு நடத்தினர். அங்கு சிறுவர்களுக்கு ஆலய நிர்வாகத்தினர் மதிய உணவு வழங்கினர்.
கடற்பரப்பில்....
பின்னர் திருகோணமலை கடற்பரப்பை சிறுவர்கள் படகில் சுற்றிப் பார்வையிட்டதோடு, அப்பகுதி கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.
திருக்கோணேஸ்வரம்..
2வது நாளன்று ஈழத்தின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தினை சிறுவர்கள் வழிபட்டனர்.
பாசிக்குடா கடற்பரப்பு
பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டனர். மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற பாசிக்குடா கடற்கரையில் 3 மணி நேரத்துக்கு மேலாக கடலில் நீராடி தமது பொழுதை கழித்தனர்.
கண்ணகி அம்மன் ஆலயம்
அன்று பிற்பகல் கன்னங்குடா கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் ஆலய நிர்வாகமும் அப்பகுதி மக்களும் சிறுவர்களுக்கு சிறப்பான முறையில் மதிய உணவு தயாரித்து வழங்கினர்.
தாந்தாமலை முருகன்
அன்றைய பொழுது தாந்தாமலை முருகன் ஆலய வழிப்பாட்டுடன் நிறைவு பெற்றது,
கொக்கட்டிச் சோலை
இறுதிநாளன்று கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வழிபாட்டுக்குப் பின்னர், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனுக்குச் சென்று அப்பகுதியினையும் சுற்றிப் பார்வையிட்டு இருந்தனர். அங்கு இராமகிருஷ்ண மிசன் தலைவர் சிறுவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.
கல்லடி பாலம்
பின்னர் அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்றனர். அதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் அண்மையில் திறக்கப்பட்ட கல்லடி பாலத்தினையும் சிறுவர்கள் பார்வையிட்டனர்.
திருகோணமலை
அங்கிருந்து மீண்டும் திருகோணமலை திரும்பிய சிறுவர்கள், அங்கு உள்ள பளிங்கு கடற்கரையில் நீராடி மகிழ்ந்து- தமது சுற்றுலாவை நிறைவு செய்தனர்.