இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரை முழுவதும் நீக்கம்!
கொழும்பு: இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக விமர்ச்சித்து எழுதியிருந்த சர்ச்சைக்குரிய கட்டுரை முழுமையாகவே நீக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
தரம் தாழ்ந்த தலைப்பு
ஷெனாலி டி வடுகே என்பவர் " How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?" என்ற தரம் தாழ்ந்த தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டது.
கொச்சைப்படுத்தும் படம்
அதேபோல முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி இருவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு படமும் வெளியிடப்பட்டிருந்தது.
தமிழகத்தில் அதிர்வலை
இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றிருந்த அந்த படமும், கட்டுரையும், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ராஜ்யசபாவிலும், தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அரசியல் கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
வேண்டுமென்ற வெளியிட்ட இலங்கை
இந்தக் கட்டுரை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது என்றும் அதற்கு விளக்கம் கேட்கவேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
கட்டுரை நீக்கமா? நாடகமா?
இதனிடையே கடும் எதிர்ப்பினை அடுத்து சர்ச்சைக்குரிய அந்த கட்டுரை இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையத்தின் முகப்புப்பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டது. முன்பக்கத்தில் கட்டுரைக்கான இணைப்பு, படம் எதுவும் இல்லை என்றாலும் http://www.defence.lk/new.asp?fname=How_meaningful_are_Jayalalitha_love_letters_to_Narendra_Modi_20140731_03 என்ற இணைப்பில் அதே கேவலமான தலைப்பில்தான் அந்த கட்டுரை இருந்து வந்தது.
முழுமையாக நீக்கம்
பின்னர் இலங்கைக்கு எதிர்ப்பு கடுமையான நிலையில் தற்போது அந்த கட்டுரையை முழுமையாகவே இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் நீக்கியிருக்கிறது.