"சிங்கள" பேரினவாத நெருக்கடியில் தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!
கொழும்பு: சிங்கள பேரினவாதிகள் தொடர்ந்த வழக்கினால் தனித் தமிழீழக் கோரிக்கையை கைவிடுவதாக இலங்கை உச்சநீதிமன்றத்தில் சத்திய பிரமாணம் தாக்கல் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இது இலங்கை தமிழர் பிரச்சனையில் ஒரு பின்னடைவாக கூறப்படுகிறது.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு வரை தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் வசம் வைத்திருந்தனர். அதே நேரத்தில் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் 'அச்சத்துடன்' விடுதலைப் புலிகளை அணுகி வந்தனர்.
அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப்- சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோ ஆகிய கட்சிகள் செயல்பட்டு வந்தன. இவை இலங்கை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.
புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பு
அதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது அரசியல் குரலாக இந்த தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்து 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை' உருவாக்கினர். மூத்த தமிழ் அரசியல் தலைவர் இரா. சம்பந்தன் இதற்கு தலைவராக்கப்பட்டார்.
புலிகளே ஏகப் பிரதிநிதிகள்
மேலும் 2001ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பும் போட்டியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற முழக்கத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து பெரும் வெற்றி பெற்றது.
2004 தேர்தல்
2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் இதே முழக்கத்தை முன்வைத்து தேர்தலை எதிர்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றது. அதே நேரத்தில் இந்த கூட்டமைப்பு பிளவையும் எதிர்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலேயே முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆனந்தசங்கரி கூட்டமைப்பை விட்டு வெளியேறினார்.
2009க்கு பின்னரும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகாப்தம் முடிந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் ஆளுக்கொரு திசையில் ஆளுக்கொரு கொள்கை என்ற போக்கில் இயங்கி வருகின்றனர்.
2013 வடமாகாணசபை தேர்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தற்போது வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியாகவும் இருக்கிறது. 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தலின் போது தேர்தல் அறிக்கை ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.
தேர்தல் அறிக்கையில் சுயநிர்ணய உரிமை
அந்த தேர்தல் அறிக்கையில் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள், சுய நிர்ணய உரிமைக்கு உரித்தானவர்கள் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இதை முன்வைத்துதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தடை விதிக்கக் கோரி 5 சிங்கள அமைப்புகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
வழக்கு தொடர்ந்தது யார்?
பெங்கமுவே நாலக்க தேரர், கலாநிதி குணதாச அமரசேகர, கல்லகே புண்ணியவர்த்தன, யூ.ஏ.அபயக்கோன், ரவிகுமார், உணவட்டுனே அனுரசிறி மற்றும் எச்.கே.டி.சந்திரசோம ஆகியோர்தான் வழக்கு தொடர்ந்தவர்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், தமிழரசுக் கட்சியின் செயலருமான மாவை சேனாதிராசா, தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய, அட்டர்னி ஜெனரல் ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டனர்.
கைவிட நெருக்கடி- கூட்டமைப்பும் ஏற்பு
இந்த வழக்கில்தான் "தனிநாடு" கோரிக்கையை கைவிடுகிறோம் என்று எழுதிக் கொடுத்தால் வழக்கை முடித்துக் கொள்ளலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூற அதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழக்கறிஞரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இனி என்ன செய்ய முடியும்?
இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக தனித் தமிழீழத்தை கோரிக்கையாக வைத்து பேச முடியாத நிலை உருவாகி உள்ளது. ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் இனி தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்த முடியும் என்ற நிலைமை உருவாகி உள்ளது.
இது ஈழத் தமிழர் பிரச்சனையில் பெரும் பின்னடைவு என்று ஒரு தரப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றும் தெளிவான கொள்கை பிடிப்பு கொண்டது அல்ல.. இதனால் தமிழர் தரப்புக்கு எந்த ஒரு பின்னடைவும் இல்லை என்று மற்றொரு தரப்பினரும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.