இலங்கையில் பெய்த மீன் மழை: மக்கள் ஆச்சரியம்
கொழும்பு: இலங்கையின் மேற்கு பகுதியில் மீன் மழை பெய்துள்ளது.
இலங்கையின் மேற்கு பகுதியில் உள்ளது சிலா மாவட்டம். இங்குள்ள சில கிராமங்களில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்போது தொப் என்ற சத்தத்துடன் வீட்டின் கூரைகள் மீது ஏதோவிழுவதை அம்மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து வெளியே சென்று பார்த்தபோது வானத்தில் இருந்து மீன்கள் சாரை சாரையாக வந்து விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் ஆச்சரியத்துடன் மீன்களை சேகரிக்க தொடங்கினர். 50 கிராம் எடையுள்ள ஐந்து முதல் 8 செ.மீ. நீளமுள்ள சிறிய வகை நன்னீர் மீன்கள் என்று தெரியவந்தது.
பலத்த காற்றடித்தபோது ஏரிகளில் இருந்த மீனை காற்று எடுத்து வந்து கிராமத்தின் மீது வீசியிருக்கலாம். அதுதான் இந்த மீன் மழைக்கு காரணம் என்று கிராம மக்கள் கருதுகிறார்கள். இலங்கையில் மீன் மழை பொழிவது இது புதிது கிடையாது. 2012ம் ஆண்டில், அந்த நாட்டின் தெற்கு பகுதியில், இரால் மீன்கள் வந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், காற்று சுழன்று அடிக்கும்போது குளங்களில் உள்ள மீன்கள் மட்டுமல்ல சில நேரங்களில் தவளையும் கூட அதனால் கவர்ந்து வரப்படும். மேக கூட்டங்களில் சிக்கி சில நேரங்களில் நீண்ட தூரத்துக்கு அவை பயணித்து மழை பெய்யும் இடங்களில் விழும் என்றனர்.