ஒன்றுபட்ட இலங்கைக்குள் சுயாட்சி: சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதி
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அத்தேர்தல் அறிக்கையில் தனிநாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது- இது இலங்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற அந்நாட்டு உச்சநீதிமன்றம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், இலங்கைக்குள் நாங்கள் தனிநாடு கோரவில்லை. ஒருங்கிணைந்த இலங்கைக்குள் சுயாட்சியையே கோருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.