நவி பிள்ளையை உள்ளே விட மாட்டோம்.. இலங்கை திமிர்ப் பேச்சு
கொழும்பு: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவி பிள்ளை தலைமயிலான விசாரணைக் குழு இலங்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டாதென்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், இந்தியாவின் குள்ளநரித்தனத்தையும் மீ்றி வெற்றி பெற்றது.
இதையடுத்து ஆணையத் தலைவர் நவி பிள்ளை தலைமையில் ஒரு விசாரணைக் குழு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
நவி பிள்ளையும் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கையில் போரின் இறுதிக் கட்டத்தினபோது கொலை செய்யப்பட்ட 40,000 பேர் குறித்த விவரத்தை நடுநிலையுடன் கூடியதாக விசாரிக்க வேண்டியது அவசியம். அவர்கள் கொல்லப்பட்ட விதம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், நவி பிள்ளை தலைமையிலான குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை கூறியுள்ளது.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்ளுக்குச் சென்று சாட்சியங்களை திரட்டுவதற்கு அனுமதியளிக்குமாறு நிபுணர் குழு இலங்கையிடம் கோரியுள்ளது. ஆனால் இலங்கையை போர்க்குற்றவாளியாக்க முயற்சிக்கும் சிலரின் முயற்சியே இது என்று கூறியுள்ள இலங்கை அரசு இந்த விசாரணைக்கு அனுமதி தர முடியாது என்று தெரிவித்துள்ளது.
எனவே இலங்கைக்கு நவி பிள்ளை போவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், வெளியில் இருந்தபடியே இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான முழுமையான ஆதாரங்களையும் திரட்டி இலங்கைக்கு நெருக்கடி கொடுக்க நவி பிள்ளை தலைமையிலான குழு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.