சீனாவின் கொழும்பு துறைமுக நகர திட்டம் சஸ்பெண்ட்... ராஜபக்சே திட்டத்தை நிறுத்தியது சிறிசேன அரசு!
கொழும்பு: சீனாவின் நிதியுதவியுடன் மேற்கொண்டு வந்த கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தை இலங்கை அரசு இன்று திடீரென நிறுத்தி வைத்து முடிவெடுத்துள்ளது. கடந்த ராஜபக்சே அரசு காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது.
இந்திய மதிப்பில், கிட்டத்தட்ட ரூ. 10 கோடியிலான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரில் வணிக வளாகங்கள், நீர் விளையாட்டுக்கள், கோல்ப், ஹோட்டல்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மிகப் பெரிய தனியார் முதலீடாகவும் இது பார்க்கப்பட்டது.
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் திட்டங்களில் ஒன்றாகவே இது பார்க்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தத் திட்டத்தை சீன அதிபர் ஸி ஜின்பிங் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பான ஒப்பந்தம் ராஜபக்சே மற்றும் சீனாவுக்கு இடையே நடந்தது. 233 ஹெக்டேர் நிலத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்படும் இடத்தில் இதை செயல்படுத்தினால் பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என இலங்கை சுற்றுச்சூழல் நிபுணர்கள் எச்சரித்து வந்தனர். ஆனால் ராஜபக்சே அரசு அதை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில்தான் சீனாவுக்கு ஆதரவாக ராஜபக்சே தொடர்ந்து நடந்து வந்ததால் எரிச்சலடைந்து வந்தது இந்தியா. சீன நீர்மூழ்கிக் கப்பலை கொண்டு வந்து இலங்கைத் துறைமுகத்தில் நிறுத்தியது. ஹம்பந்தோட்டா துறைமுக மேம்பாடு, கொழும்பு துறைமுக நகரத் திட்டம் என்று சீன நடமாட்டம் இலங்கையில் அதிகரித்து வந்தது இந்தியாவை கோபத்தில் ஆழ்த்தி வந்தது.
இந்த சூழ்நிலையில்தான் ராஜபக்சே தேர்தலில் படு தோல்வியுற்று இந்தியாவுக்குச் சாதகமான மைத்ரிபால சிறிசேன அதிபரானார். அவர் வந்ததும் இந்தியாவின் நெருக்கடி அதிகரித்தது. இதன் எதிரொலியாக சீன நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு முதலில் ஆப்பு வைக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் காலியாகியுள்ளது.
இன்று கொழும்பில் நடந்த இலங்கை அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அனைத்துக் கட்டுமானங்களும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
இதுகுறித்து அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் ரஞ்சித் சேனரத்னே கூறுகையில், அமைச்சரவை முடிவுப்படி அனைத்துக் கட்டுமானங்களும் உடனடியாக நிறுத்தப்படுகிந்றன. இந்தத் திட்டத்திற்கு அமைச்சரவை துணைக் குழு அனுமதி தரவில்லை என்றார் அவர்.
இந்தத் திட்டம் முறையாக கையெழுத்தாகவில்லை, பெருமளவில் ஊழல் நடந்துள்ளது என்று ஏற்கனவே ராஜபக்சே அதிபராக இருந்த எதிர்க்கட்சிகள் கூறி வந்தன என்பது நினைவிருக்கலாம்.