சிறைப்பிடிக்கப்பட்ட 63 படகுகளை விடுவிக்க முடியாது... இலங்கை அறிவிப்பால் தமிழக மீனவர்கள் சோகம்
கொழும்பு: இந்திய சுதந்திர தினத்தஒயொட்டி இலங்கை சிறையிலிருந்த 94 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், அவர்களது படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்து விட்டது.
கடந்த மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 94 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைச் சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
அதன்படி, நேற்று 94 மீனவர்கள் பத்திரமாக தமிழகம் வந்து சேர்ந்தனர். மீனவர்களை விடுதலை செய்த இலங்கை அரசு அவர்களது படகுகளைத் திருப்பித் தர மறுத்து விட்டது. இது மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதசேனரத்னே கூறுகையில், ‘விடுதலை செய்யப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 94 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 63 விசைப்படகுகளையும் விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை' எனத் தெரிவித்தார்.
இரண்டு மாதங்களாக பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்காவிட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தமிழகம் திரும்பிய மீனவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.