ஜெயலலிதா குறித்த அவதூறுக் கட்டுரை - வருத்தம் தெரிவித்தார் ராஜபக்சே
கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பான கட்டுரை வெளியானதற்காக வருத்தப்படுகிறேன். இது எப்படி நடந்தது என்பது குறித்து நான் விளக்கம் கேட்டுள்ளேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார்.
ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சேவின் நேரடிப் பொறுப்பில் உள்ள பாதுகாப்புத்துறை இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதாவை கேவலமாக சித்தரித்து ஒரு கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருந்தது.
அந்தக் கட்டுரையும், அதற்காக அவர்கள் போட்டிருந்த படமும் மிகவும் கீ்ழ்த்தரமாக இருந்ததால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் மத்திய அரசு வழக்கம் போல மெத்தனமாகவே இருந்தது.
ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த்தின் தேமுதிக தவிர அத்தனைக் கட்சிகளும் இலங்கையின் இந்த செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததால் மத்திய அரசு சற்று அசைந்து கொடுத்தது. திமுக தலைவர் கருணாநிதியே கூட மிகக் கடுமையாக இந்த செயலைக் கண்டித்திருந்தார். கடைசி ஆளாக விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மத்திய அரசு இலங்கையைத் தொடர்பு கொண்டு ஆட்சேபனை எழுப்பியதைத் தொடர்ந்து கட்டுரையை நீக்கியது இலங்கை அரசு. மேலும் மன்னிப்பும் கேட்டது. இருப்பினும் அதிமுக விடவில்லை. தொடர்ந்து மத்திய அரசை உலுக்கி எடுத்து வந்தது. நேற்று நாடாளுமன்றத்தையும் அதிமுக உறுப்பினர்கள் ஸ்தம்பிக்க வைத்தனர்.
இதையடுத்து நேற்று இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னேவே நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்த விவகாரத்தில் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடந்ததற்காக வருத்தப்படுகிறேன். இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளேன் என்றார் ராஜபக்சே.