இந்தியாவுக்கு 'நன்றிக்கடன்' செலுத்த தமிழக மீனவர்களை விடுவிக்கிறாரா ராஜபக்சே?
கொழும்பு: நேற்று இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து தான் இலங்கைக்கு 'விசுவாசமாக' இருப்பதை உறுதி செய்ததற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் ராஜபக்சே விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக இருநாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை நடந்தது. அதனைத் தொடர்ந்து இலங்கைச் சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் சிலர் விடுதலை செய்யப் பட்டனர்.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்த சூழ்நிலையில் மீண்டும் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களைக் கைது செய்தது. இதனால் அப்பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜெனிவாவில் நடைபெற்று வரும் சர்வதேச மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணிப்பதாக அறிவித்தது.
இதைத் தொடர்ந்து இதுவரை மீனவர் விடுதலை குறித்து வாயே திறக்காமல் இருந்து வந்த இலங்கை அரசு திடீரென சிறைகளில் இருக்கும் 98 தமிழக மீனவர்கள் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது. அதற்கான உத்தரவை அதிபர் மகிந்த ராஜபக்சே பிறப்பித்துள்ளார்.
இந்த தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் ஹெரத் தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் விடுதலைக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு இலங்கை மீன் வளத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க மாநாட்டை இந்தியா புறக்கணித்ததற்கு நன்றிக் கடனாகவே தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.