இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!
கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தமது பாரம்பரிய கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போதே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்த தொடர் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் சென்னையில் இருநாட்டு மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கொழும்பில் கடந்த 25-ந் தேதி 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.
அதற்குள் மீண்டும் தமிழக மீனவர்களை கொத்து கொத்தாக இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் இருதரப்பு பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் திடீரென இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை சிறையில் மொத்தம் 98 தமிழக மீனவர்கள் உள்ளனர். தற்போது இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திகளால் தமிழக கடலோர கிராமங்கள் நிம்மதி அடைந்துள்ளன.