சாந்தனைப் பார்க்க கண்ணீருடன் காத்திருக்கிறேன் - தாயார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தற்போது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள சாந்தன் ஈழத்தைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் உடுப்பிட்டி ஆகும். ஒற்றைக் கண் சிவராசனும் இதே ஊரைச் சேர்ந்தவர்தான்.
இந்த ஊரில்தான் அவரது தாயார் மகேஸ்வரி வசித்து வருகிறார். தனது மகனை விடுவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு மகேஸ்வரியை ஆனந்தக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டி அளிக்கையில், உயிர் என்னைவிட்டு பிரிவதற்குள் என் மகனைப் பார்க்கவேண்டும். கடைசிக்காலம் வரை என் மகனோடு வாழவேண்டும் என்ற ஆசையோடு இருபத்து மூன்று வருடங்களாக காத்திருந்தேன்.
சாந்தனின் ஏக்கத்தில்தான் அவனின் தந்தை மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வந்த நிலைமை எனக்கும் வந்துவிடக் கூடாது. சாந்தனை பார்க்காமல் போய்விடக்கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டி ருந்தேன். என் மகனை இத்தனை வருடமும் தொலைக்காட்சியில் காட்டும்போதுதான் பார்த்து வந்தேன்.
இப்போது அவன் விடுதலையாவது மகிழ்ச்சியாக இருக்கிறது. என் மகனின் விடுதலைக்காக போராடிய வர்களுக்கு நன்றி. தமிழக மக்களுக்கும், தமிழக முதல்வருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.